என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday, 13 October 2025

ஆஸ்திரேலிய அறிவியல் புனைவிதழில் எனது சிறுகதை

 இணைய நண்பர்களுக்கு,


ஒரு ஆஸ்திரேலிய அறிவியல் புனைவிதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகத் தேர்வாகியிருக்கிறது. இதழ் ஆசிரியரான Ion Combe, இதழின் வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பவும் எனது சிறுகதையைத் தெரிவு செய்திருப்பதால், சிறுகதைக்கு ஒலி வடிவம் தர நல்ல குரல் வளம் கொண்ட narrator தேவை.

யாருக்கேனும் விருப்பம் இருந்தால் உள்பெட்டிக்கு வரவும்.

நன்றி.

Dear friends,

An Australian Science Fiction magazine has chosen one of my short stories to feature in its upcoming issue. The editor, Ion Combe, has requested an audio version as he wants to air the piece(in English) in Australia & New Zealand.

Any narrator in the network, interested, please inbox me.

Thanks
Ramprasath

Tuesday, 7 October 2025

நான் வாசித்த எழுத்துக்கள் - 3

நான் வாசித்த எழுத்துக்கள் - 3

சுஜாதா, பாலகுமாரன் என்று வாசிப்பு வழி எழுத்துக்கள் நுழைந்திருந்த காலம் அது. கீற்றுவில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். Speculative Fiction வகையறாக்கள் தான். அப்போது உயிர்மை பதிப்பகம் உயிரோசை என்றொரு இணைய வார இதழ் துவங்கினார்கள். அதில் எழுதத்துவங்கியிருந்தேன். 

சீனியர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்பது கல்லூரி முதலாம் ஆண்டில் கற்ற பாலபாடம். 

தமிழ் எழுத்துலகின் மும்மூர்த்திகளான சாரு, ஜெமோ, எஸ்.ரா மூவரையும் ஒரே நேரத்தில் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது பணி நிமித்தம் லண்டனில் இருந்தேன். அதிகாலை ஐந்தரை மணிக்கே அலுவலகம் வந்துவிடுவேன். அப்போது அலுவலகமே வெறிச்சோடிக்கிடக்கும்.  மடிக்கணினியைத் திறந்ததுமே சாரு, ஜெயமோகன், எஸ்.ரா பக்கங்களை ஏதோ அலுவலகத்துக்கு வந்தால் அடையாள அட்டையைத் தேய்ப்பது போல், தினசரி இந்த மூவரின் இணைய பக்கங்களை வாசித்துவிட்டுத்தான் அந்த நாளே துவங்கும்.

துரதிருஷ்டம் என்னவென்றால், அப்போது உடன் பணியில் இருந்தவர்களில் யாருக்குமே வாசிப்புப் பழக்கம் இருக்கவில்லை. அதனால், வாசிப்பது, எனக்குள் அசை போடுவது, இணையத்தில் மற்றவர்கள் விமர்சனங்களைப் படிப்பது, எழுதுவது என்று இருந்த காலகட்டம். 

சாருவின் நான் லீனியர் எழுத்து, எழுத்தையே வேறு விதமாகப் பார்க்க அணுக வைத்தது. அவருடைய ஜீரோ டிகிரி நூலை வாங்கி வாசிக்க வைத்திருந்தேன். அம்மா இரண்டு பக்கங்கள் புரட்டிப் பார்த்துவிட்டு, கடுமையாகத் திட்டினார். பின், ஒளித்து மறைத்துத்தான் படித்து முடிக்க வேண்டி இருந்தது. ஜெமோ பக்கங்களில் நிறைய இலக்கிய சிறுகதைகள், இலக்கிய சர்ச்சைகள், விமர்சனங்கள் பகிரப்படும். எஸ்.ராவின் எனது இந்தியா போன்ற நூல்களைத் தேடி வாங்கி வாசித்தேன். கே.கே.நகரில் இருந்த மறைந்த எழுத்தாளர் ஞானி அவர்களின் கேணி இலக்கிய சந்திப்பு நிகழ்வில் எஸ்.ராவை ஒரே ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் தன் எழுத்துக்கென 'தேசாந்திரி' பதிப்பகம் துவங்கியிருந்தார். அதற்குள் பணி நிமித்தமாக அமெரிக்கா வரவேண்டியதாகிவிட்டது.

அமெரிக்கா வந்த பிறகு இணையம் மட்டுமே வழியாகிப்போனது. ஆதலால், கண்ணில் படுவது எல்லாவற்றையும் வாசிக்கத்துவங்கினேன். கிட்டத்தட்ட, தமிழ்ச்சூழலில் நடப்பில் எழுதும் எல்லா எழுத்தாளர்களையும், குறைந்தபட்சம் அவர்களின் ஒரே ஒரு ஆக்கத்தையாவது இணையமென்னும் மாபெரும் கடலில் இருந்து பொறுக்கியெடுத்து நான் ஒரே ஒரு முறையேனும் வாசித்திருப்பேன் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். ஆனால், என்னால் எதைச் சொல்ல முடியாதென்றால், இத்தனை எழுத்தாளர்கள் குறித்து, நான் வாசிக்க  நேர்ந்த அவர்களின் அந்த ஒரு ஆக்கத்தை வைத்து என்னால் எந்த தீர்மானத்துக்கு வர முடியாது என்பது தான். ஏனெனில், இங்கே அமெரிக்காவில் வேலையை தக்க வைக்கும் பிரயத்தனத்திலேயே பெரும்பான்மை நேரங்கள் கழிந்துவிடுகிறது. வாசிக்கக் கிடைக்கும் நேரத்தில் பெருமளவு எழுத்திற்கும், மொழிபெயர்ப்புக்கும் போய் விடுகிறது. இந்தப் பின்னணியில், வாசிக்க நேரமே இருப்பதில்லை. 

கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டுப் பார்த்தால் எனக்குக் கிடைப்பது இதுதான். இதுவரையில் எழுதியவர்கள் எல்லோரையும் வாசித்த பிறகு தான் எழுத வர வேண்டும் என்றால், அதற்கு ஆயுள் போதாது. வாசிப்பே இல்லாமல் இருத்தலும் சரியில்லை. ஆக, வாசிப்பது பாதி, எழுத்து மீதி என்பதுதான் சரியான விகிதாச்சாரம். தமிழ் இலக்கிய உலகம் என்பது ஒரு பரந்துபட்ட களம். அதில் தேர்ச்சி என்றொரு நிலையே கிடையாது. நாம் எல்லோரும் மாணவர்களே. எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற ஒரே ஒருவர். எஞ்சிய எல்லோரும் 'முயற்சிப்பவர்கள்' மட்டுமே. ஆகையால், காலத்தின் போக்கினூடே எழுத்தோடு கிடைக்கிற நேரத்தில், தேவைக்கு ஏற்ப வாசித்தல் தான் எனக்குச் சரியாக வருகிறது. அதை தான் நானும் செயல்படுத்துகிறேன். 





Sunday, 28 September 2025

அடுத்த பரிணாமம் - சிறுகதை

சொல்வனம் 351வது இதழில் வெளியான எனது 'அடுத்த பரிணாமம்' சிறுகதை.

https://solvanam.com/2025/09/28/%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d/

எனது சிறுகதையைத் தெரிவு செய்து வெளியிடும் சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.




கம்ப்யூட்டா - சிறார் கணித சிறுகதைகள்

 'கம்யூட்டா'வில் மொத்தம் பத்து சிறுகதைகள். அவற்றில் மூன்று ஏற்கனவே அமெரிக்க அறிபுனை இதழாசிரியர்களுக்குப் பகிரப்பட்டு, நல்ல விமர்சனங்கள் பெற்றுவிட்டது.

உதாரணமாக,

'கூடை மனிதன்' சிறுகதைக்கு L.Ron Hubbardல் (2024 லேயே) Honorable Mention கிடைத்தது.

'மடக்கை' சிறுகதைக்கு TCL இதழிலும்,

'பரிச்சயமற்ற மாறிலி' சிறுகதைக்கு Orion's Belt இதழிலும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. (அவற்றை, வாசகர்கள் கவனத்துக்கென, கம்ப்யூட்டா நூலின் கடைசிப் பக்கங்களில் இணைத்திருக்கிறேன்).

சிறுகதைகளை நாம் என்னவாக வேண்டுமானாலும் அடையாளப்படுத்தலாம். அதனை, துறை சார்ந்த நபர்களும், இலக்கிய பரிச்சயம் கொண்டவர்களும் வழிமொழிய வேண்டுமே? அதற்குத்தான்.

இனி வரும் காலங்களில், எஞ்சிய சிறுகதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க திட்டம் உள்ளது. பணிகளை மெதுவாகத்தான் மேற்கொள்ள முடியும். ஏனெனில், எழுத்து பகுதி நேரம் தான் அல்லவா?.

இந்தச் சிறுகதைகளை எழுதி நாளாகிறது. எழுதிய காலகட்டத்தில், இணையத்தில் சிறுகதைகளைப் பகிர்வதால் சில ஏமாற்றங்களைச் சந்தித்திருந்ததால், வெகுவாக மனமுடைந்து போயிருந்தேன். அந்த சமயத்தில் எழுதப்பட்ட காரணத்தால் இச்சிறுகதைகளுக்கு என் மடிக்கணிணியை விட்டு வெளியே வர வாய்ப்பமையவில்லை. தவிரவும், 2024 இறுதிக்குள் இத்தொகுப்போ, மொழிபெயர்ப்புப் பணிகளோ நிறைவாகவில்லை என்பதுவும் ஒரு காரணம். இடைப்பட்ட 2025ன் முற்பகுதியை, மொழிபெயர்ப்புகளை ஆங்கில ஊடகங்களுக்கு அனுப்பி அங்கிருந்து என்ன பதில் வருகிறது என்று பார்க்க பயன்படுத்திக்கொண்டேன். ஊடகங்களிலிடமிருந்து நேர்மறையான விமர்சனங்கள் வரத்துவங்கியிருப்பதில் மகிழ்ச்சியே.

இத்தொகுப்பை வெளிக்கொணர உதவும் படைப்பு பதிப்பகத்தாருக்கு எனது நன்றிகள்.


'Computa' has ten stories - three of them have already gotten good reviews from various American science fiction magazines.

For example,

'Koodai Manithan(The Bucket Man)' received an Honorable Mention in L.Ron Hubbard last year,

'Madakkai(The Rhythm Log Residency)' from TCL magazine and

'Parichayamatra Maarili(Unknown Variable)' from Orion's Belt Magazine. I have attached them at the trailing end of the book.

You may ask why? Anybody can claim anything; all that matters is what the subject matter experts say about the work. I plan to translate the remaining stories one by one and get them all acknowledged by SMEs, but it will be a slow process, as writing isn't my full-time job.

This book should have been released to readers last year. I was somewhat disheartened by the plagiarism targeting freely shared original works online—no wonder these works were shelved and didn't reach readers for over a year. Neither the collection nor the translations were ready by the end of 2024, which was another reason. I literally tried to utilize the first half of 2025 to share the translated works with sci-fi magazines and see what they have to say about them. I am glad I have been receiving positive feedback.

Hearty thanks to Padaippu for bringing out this book.




Thursday, 11 September 2025

கூகுள் மற்றும் ஏ.ஐ

கூகுள் மற்றும் ஏ.ஐ 





Tuesday, 2 September 2025

Social media influencers குறித்த "வா தமிழா வா"

 Social media influencers குறித்த "வா தமிழா வா" நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது.


தங்களிடம் ஏதோவொரு திறமை இருக்கிறது என்று நம்புபவர்களுக்கு, அதனை சோதித்துப் பார்க்க நிச்சயம் ஒரு தளம் தேவை. இன்றைக்கு சமூக ஊடகங்கள் வளர்ந்திருக்கிறது. நான் கல்லூரி படிக்கையிலெல்லாம் இந்த ஊடகங்களெல்லாம் இல்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் இருக்கிறது. நான் கல்லூரி முடித்த 2002ம் ஆண்டில் 1100 நோக்கியா தான் சந்தைக்கு வந்திருந்தது. இரண்டே ஆண்டுகளில் வீட்டுக் கடன், கார் கடன் என்கிற சுழற்சியில் சிக்கியிருந்தேன். எழுத்து மட்டுமே கிடைத்த சொற்ப பகுதி நேரத்தில் முயன்று பார்க்கக்கூடிய ஒன்றாக அமைந்தது. கல்லூரியில் வெட்டி நேரங்கள் நிறைய கிடைக்கும். இப்போதெல்லாம் அந்த நேரத்தைப் பயன்படுத்தி குறும்படங்கள் என்று இறங்கிவிடுகிறார்கள். மைக்செட் ஷ்ரிராம், ப்ரதீப் ரங்கநாதன் போன்றோர் கல்லூரி காலங்களிலேயே வாய்ப்பைப் பயன்படுத்தி அரை இயக்குனர் ஆகிவிடுகிறார்கள். அந்த வாய்ப்பெல்லாம் எனக்கு இருக்கவில்லை என்ற வருத்தம் தான். 


சமூக ஊடகங்கள் மக்களிடையே காட்சி ஊடகங்களைப் பழக்கப்படுத்திவிட்டன. மக்களும் அதற்கு எளிதாகப் பழகிவிட்டார்கள். ஆறு திரும்பும் திசையெல்லாம் சரியானதாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், ஆற்றின் திசையில் தான் மனித நாகரீகங்கள் தழைக்க ஏதுவாகிறது இல்லையா? நாகரீகங்கள் தழைத்தபிறகு, திசை தவறானது என்றறிந்து என்ன பிரயோஜனம்?


சமூக ஊடகங்களில் திறமை பழகுதலும், அத்திறமை கனிந்து மக்களின் பயன்பாட்டுக்கு ஏதுவாகுதலும் இணையும் புள்ளியில் நல்ல திறமைகள் சமூகத்திற்கு வாய்க்கின்றன. எந்தப் புள்ளியிலும் இணையாத போது, அது சுதி சேராத இசை போல் அப்படி அப்படியே கலைந்துவிடுகிறது. அடையாளச்சிக்கலுக்குள் சிக்கிவிடுகிறது. எதைத் தேடி வந்தார்களோ அதை விட்டுவிட்டு, ஆள் சேர்ப்பில் இறங்கிவிடுகிறார்கள். 


அமெரிக்காவின் ஒன்லி ஃபான்ஸுக்கு நிகராக, பெண்கள் இன்ஸ்டாகிராமில் நிர்வாணம் காட்டுகிறார்கள். ஒன்லி ஃபான்ஸிலாவது சம்பாதிக்க வழி இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. பெயரைக் கெடுத்துக்கொள்கிறார்கள். அது தலையெழுத்தையே தீர்மானித்துவிடுகிறது. 


மற்றபடி சமூக ஊடகத்தை திறமையை வெளிப்படுத்த நாடுபவர்களில் சொற்பமானவர்களே, தங்கள் இலக்கைக்கண்டடைகிறார்கள். எஞ்சியவர்கள் கிடைத்ததை இலக்காக்கிக்கொள்கிறார்கள். கிடைத்ததை இலக்காக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். 


திறமை என்று தாங்கள் நினைக்கும் ஒன்று உண்மையிலேயே இருப்பின், இலக்கை கண்டடைவீர்கள். இலக்கை அடைய முடியவில்லை என்றால் இதற்கு அர்த்தம் நீங்கள் திறமை அற்றவர் என்பதல்ல. உங்களுக்கு வேறொரு திறமை இருக்கலாம் என்பதுதான் அர்த்தம். அது என்ன என்ற தேடலில் இறங்குவது ஒரு நல்ல அணுகுமுறை என்று எனக்குத் தோன்றும். இதன் மூலம் நாம் தேங்கி நிற்கவேண்டியதில்லை. 


இணையத்தில் இப்படி 'தேங்கி' நிற்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். உண்மையில், 'தேங்கி'க்கிடந்தாலும் ஆபாசமே கூட பார்வையாளர்கள் இன்றித்தான் கிடக்கிறது. ( என்னுடைய இன்ஸ்டா பக்கத்துக்கு இருநூறு ஆயிரம் ஃபாலோயர்கள் என்று பீத்த வேண்டியதில்லை. ஏனெனில், அந்த இருநூறு ஆயிரம் ஃபாலோயர்கள் எல்லா ஆபாச இன்ஸ்டா பக்கத்திற்கும் இருப்பதைப் பார்த்தால், ஒரே இன்ஸ்டா பயனர் எல்லாவற்றிலும் ஃபாலோயராக இருப்பதன்று வேறு மார்க்கமில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.) ஆக, ஆபாசமாகவே இருந்தாலும் எத்தனையைத்தான் பார்ப்பது? ஆபாசத்துக்கான கவர்ச்சியையே வீழ்த்தியதில் இந்தத் 'தேக்க'த்திற்கு நிறைய பங்கிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். 


சமூக ஊடகத்தில் திறமையைக் காட்ட முனைவோர்க்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம்:

1. தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

2. சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

3. திறமையை வெளிக்காட்டுகையில், நம்மைச் சுற்றி ஒரு கூட்டம் கூடும் தான். ஆனால், கூட்டத்தை தக்கவைக்கவென இறங்காதீர்கள். கூடுபவனே தொடர்ந்து கூடினால், அவனும் வளரவில்லை. நாமும் வளரவில்லை என்று பொருள். தினம் தினம் புதுப் புதுக் கூட்டம் கூடினாலும் அது சரியல்ல.  ஆக, கூட்டத்தைத் தக்க வைக்கவென பிரயனத்தபட இறங்காதீர்கள். திறமை கூட்டத்தை உருவாக்க வேண்டுமே ஒழிய கூட்டம் திறமையை அல்ல.

4. நம் இலக்குகளை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். கூட்டம் அல்ல. அதைப் புரிந்துகொள்ளுங்கள். 

5. கூட்டமே கூடாமல் இருப்பது ஒரு வகையில் நல்லது. புதிய புதிய முயற்சிகளில் நாம் இறங்க முடியும். அனானிமஸ் ஆக இருப்பது பல வழிகளில் நல்லது.


Sunday, 31 August 2025

சமீபத்திய சிறுகதைகளுக்கு வந்த பின்னூட்டங்கள்

சமீபத்திய சிறுகதைகளுக்கு வந்த பின்னூட்டங்கள்:

அறுதி விடியல்:

https://solvanam.com/2025/08/10/%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/


டோரோத்தி:

https://vasagasalai.com/116-story-ram-prasad/

பின்னூட்டமிட்ட அறிவியல் புனைவு வாசகர்களுக்கு எனது நன்றிகள் 🙏🙏🙏 






Sunday, 24 August 2025

துரதிருஷ்டம் - சிறுகதை - சொல்வனம்

சொல்வனம் 349வது இதழில், எனது சிறுகதை 'துரதிருஷ்டம்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.

சிறுகதையை வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்:

https://solvanam.com/2025/08/24/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/




வாசகசாலை 116வது இதழ் சிறுகதைகள்

 வாசகசாலை 116வது இதழ் சிறுகதைகள்

******************************************


ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெளியாகியிருக்கிறது வாசகசாலையின் 116வது இதழ்.

ஜெயபால் பழனியாண்டி எழுதியிருக்கும் பூச்செடி, ஒரு ஃபீல்-குட் கதை. பூச்சி ஒன்று இறந்து போகிறது. இரண்டு பெண் பிள்ளைகள் அதனை அடக்கம் செய்யும் காட்சிதான் கதை. சிறார்களுக்கே உரித்தான காட்சிகளோடு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது கதை. 

//மரணத்திற்குப் பிறகும் குழந்தைகளால் கொண்டாடப்படுகிறோம் என்பதை அறியாமலேயே மரணித்துப் போகின்றன பூச்சிகள்// என்று முடிக்கிறார் ஆசிரியர். 


*****************************

மொட்டு மலர் அலர் சிறுகதையில் ஆசிரியர் கமலதேவி கிராம வாழ்வை அப்படியே நம்மை வாழ வைத்திருக்கிறார். வாசிக்க வாசிக்க, கிராமத்தில் நாமும் ஓர் அங்கமாகவே ஆகிவிட்ட ஒரு உணர்வு எஞ்சுகிறது. சிரமேற்கொண்டு நேரமெடுத்து காட்சிகளை வர்ணிக்க உழைத்திருப்பது கதையை வாசிக்கையிலேயே தெரிகிறது. 



*****************************

பாலு எழுதியிருக்கும் 'மரணத்துளிகள் பல கேள்விகளை எழுப்பியது. உண்மையாகவே இப்படி ஒரு  சுகவீனம் இருக்கிறதா? இப்படி சுகவீனப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களா? அப்படி ஒரு சுகவீனப்பட்ட பெண்ணின் குடும்பம் எப்படிப்பட்ட துன்பங்களுக்கு உள்ளாகும் என்கிற ரீதியில் அமைந்த விவரணைகள் கதையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் சென்றுவிடுகின்றன.  இறுதியில் கதையின் திருப்பமும் அருமை.


*****************************

இராஜலட்சுமி எழுதியிருக்கும் தெய்வானை சிறுகதையும் கிராமப் பின்னணி கொண்ட சிறுகதைதான். கதாபாத்திரங்களின் இயல்பில்,   தெய்வானைக்கு இறுதியில் என்ன நடக்கிறதோ  அது மட்டும் தான் நடக்க முடியும் என்ற ஸ்திதி இருப்பது சிறப்பாக இருக்கிறது. கிராமங்களில் இப்படித்தான். //இதுக்கு நல்லது கெட்டது பாத்துச் செய்ய யாருமில்லாமதான்...// இப்படி எல்லா தலைமுறைகளிலும் யாரேனும் சொல்லப்படுவார்கள் என்பது உலகமே அறிந்த ரகசியம் தான்.  இது நிச்சயமாக சமூக அமைப்பின் தோல்வி தான். இல்லையா?


*****************************

தாழப்பறா சிறுகதை வெள்ளிப்பட்டறையில் ஊத்து வேலைக்கு வரும் ஒருவர் பற்றிய கதை. பற்பல வேலைகள் செய்துவிட்டு எதிலும் லயிக்காமல் வேலை மாறிக்கொண்டே வருகிறார். வெள்ளிப்பட்டறை வேலைகள் குறித்த விவரணை எனக்குத்தான் புரியவில்லை.கதாசிரியர் கவனத்துடன் எழுதியிருப்பதாகத்தான் தெரிகிறது. 

*****************************


இதிரிஸ் யாகூப் எழுதியிருக்கும் அமானிதங்கள் ஒரு இஸ்லாம் மதத்தைச் சார்ந்த குடும்பமொன்றில் சகோதரிகளின் திருமணத்தின் நிமித்தம் அல்லலுறுபவனின் இக்கட்டை காட்சிப்படுத்துகிறது. பேச்சுவழக்கிலான உரையாடல்கள் அருமை. கபால், கல்பை வாஜிபாயிருச்சி, அஸர் ஆகிய வார்த்தைகள் எனக்குப் புதிது.

இப்போதைக்கு இவ்வளவு தான் வாசிக்க  நேரம் கிட்டியது. எஞ்சிய சிறுகதைகள் வாசித்ததும் எழுதுகிறேன். 

Friday, 22 August 2025

எரியும் பனிக்காடு - இரா முருகவேள்

எரியும் பனிக்காடு - இரா முருகவேள்


இப்படித்தான் அந்த நூல் எனக்குப் பரிச்சயம் ஆனது. இரா.முருகவேள் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.  இந்த நூலை முழுமையாக வாசிக்க எனக்கு நேரம் அமையவில்லை. ஆனால், பகுதியாக வாசித்திருக்கிறேன். அந்த வாசிப்பனுபவம் எனக்குத் தந்தவைகள் எழுத்து குறித்த எனது புரிதலை மேம்படுத்திக்கொள்ள உதவின என்றால் அது மிகையில்லை. 

'எரியும் பனிக்காடு' நாவல் , PH Daniel அவர்கள் எழுதிய 'Red Tea' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு என்பது முதல் தகவல். 1941 முதல் 1965 வரை, அவர் தேயிலை தோட்டங்களில் மருத்துவராய் வேலை செய்த போது,   தான் கண்டுணர்ந்த தேயிலை தோட்டத்துப் பணியாளர்களின் வாழ்வை இந்த நூலில் பதிவு செய்கிறார்.

இதில் எனக்கு எழுந்த கேள்வி, ஒருக்கால், இந்த டேனியல் என்பவர் எழுத்தில் ஆர்வம் இல்லாத, அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த பல மருத்துவர்கள் போல் இருந்திருப்பாரேயானால், நமக்கு ரெட் டீ  நூல் கிடைத்திருக்காது. இல்லையா? 

1941 முதல் 1965 வரை வாழ்ந்த எத்தனை மருத்துவர்களுக்கு, தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய வாய்ப்பமைந்தது? அவர்களில் எத்தனை பேருக்கு எழுத்து வசப்பட்டிருந்தது? அவர்கள் எல்லோருக்கும் ரெட் ரீ நாவல் எழுதத் தோன்றியதா? அப்படித் தோன்றியிருந்தால் இத்தனை நேரம் நமக்கு பல வெர்ஷன்களில் தேயிலைத் தோட்டத்துப் பணியாளர்கள் குறித்து கதைகள் கிடைத்திருக்க வேண்டுமே? அப்படி இல்லையே. ஆக, ரெட் டீ நூலை உருவாக்க, இந்த இயற்கை வலிந்து, எழுத்தில் ஆர்வம் உடைய ஒரு மருத்துவரை இக்காலகட்டத்தில் கச்சிதமாக அஸ்ஸாமுக்கு அனுப்பியிருக்கிறது என்று தான் அர்த்தமாகிறது. அல்லவா? இதன் பின்னால் ஒரு துல்லியம், ஒரு நைச்சியமான திட்டமிடல், மற்றூம் அபாரமான ஒருங்கிணைப்பு இயற்கையால் உருவாக்கப்பட்டிருப்பதை நாம் கவனிக்கலாம்.  

அப்படியானால், இது கடவுளின் செயல் அன்றி வேறென்ன? வேறு எப்படி இதனை அடையாளப்படுத்த முடியும்? வேறு எப்படி அடையாளப்படுத்தினால் இது பொறுத்தமாக இருக்கும்?

இந்தக் கேள்வி, எழுத்து என்கிற இலக்கிய செயல்பாடு குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ள வைத்தது எனலாம். இந்தப் பின்னணியில், நான், எழுத்துத் துறையில், முதன்மையானவர், இரண்டாமவர், மூன்றாமவர் என்கிற வரிசைகளையெல்லாம் முழுமையாக துவக்கம் முதலே மறுக்கிறேன். 

இயற்கையின் தேர்வு, அதற்கான நோக்கம் , அதன் தொலை நோக்கிய பயன்பாடு ஆகியனவே ஒரு எழுத்தின் இருப்பின் பின்னணிக் காரணிகளாகின்றன என்பது என் அவதானம். இதைத் தாண்டி எழும் வேறு எந்த விதமான புரிதலும், குறை புரிதலே அல்லது முதிர்ச்சியற்ற புரிதலே என்பது என் வாதம். எழுத்து வசப்பட்ட எல்லோரும் எதையோ ஒன்றை ஆவணம் செய்யவே உருவாகிறார்கள். அவர்களை வைத்து, இயற்கை, தான் செய்ய நினைப்பதைச் செய்து முடிக்கிறது. எல்லா எழுத்தின் பின்னாலும் இருப்பது இயற்கையின் ஆற்றல் மட்டுமே, இறை சக்தியின் ஆற்றல் மட்டுமே.

மெளனி 24 கதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். வொல்ஃப் டொடெம் எழுதிய ஜியாங் ராங்க் அந்த ஒரு நூல் மட்டும் தான் எழுதினார். ஆக, எழுத்தாளர்களை இயற்கை எந்தக் காரணத்திற்காக அனுப்புகிறதோ அந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். அதற்கான உத்வேகம், ஆற்றல், முனைப்பு, பைத்தியக்காரத்தனம், பித்து நிலை,  ஆகியனவற்றை இயற்கை, ஒரு சிற்பி மிகக் கவனமாகத் தன் சிற்பத்தை மிக மிகத் துள்ளியமாகச் செதுக்குவது போல், காரணிகளை உருவாக்கி, சூழல்களைச் செதுக்கி, எழுத்தாளர்களை அதனூடே பயணிக்க வைத்து செதுக்குகிறது. எழுத்தாளன், ஒரு கருவியாய் அவைகளினூடே பயணித்து மீண்டு தனக்கு இயற்கையும், இறை சக்தியும் விதித்த கட்டளைகளை நிறைவேற்றுகிறான். அவ்வளவுதான். 

எப்படியாகினும், மூலம், இறைவனுடையது. எழுத்தாளன் என்பவன் வெறும் கருவி என்பது என் வாதமாகவும், பார்வையாகவும் ஆகிறது. சில விடயங்கள் மாறப்போவதில்லை என்பதை நம் உள்ளுணர்வு சொல்லிவிடும். இந்தப் புரிதல், இனி என்னுள் மாறப்போவதில்லை என்பதை அந்த நூலைக் கடக்கையில் உள்ளுணர்வு சொல்லிவிட்டிருந்தது.